வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். எனவே போக்கவரத்து ஊழியர்களோடு நாளை மீண்டும் பேச்சு வார்தை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal