நாளை மாறுநாள் ஐந்தாம் தேதி கனிமொழியின் பிறந்த நாள். அன்றைய தினம் ‘நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகள்’ என கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் கனிமொழி போட்ட திடீர் உத்தரவால் களையிழந்து காணப்படுகிறது சிஐடி காலனி!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எடுத்துள்ள இந்த முடிவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 5ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் வரும் நிலையில் கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்ப்பது என முடிவெடுத்துள்ள கனிமொழி, அன்றைய தினம் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூற கழகத்தினர், நண்பர்கள் உட்பட யாரும் வர வேண்டாம் என கறாராக கேட்டுக்கொண்டுள்ளார்.

கனிமொழியின் 56வது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அதனை கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு தடை போட்டிருக்கிறார் கனிமொழி. இதனால் கனிமொழியின் சிஐடி காலனி இல்லம் களையிழந்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் கனிமொழி பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்பாகவே அலங்காரம், தோரணம் என சி.ஐ.டி. காலனி இல்லம் பரபரப்பாக காணப்படும். ஆனால் இந்தாண்டு மிஸ்ஸிங்.

இதனிடையே தாம் ஏன் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பதை கனிமொழியே விவரமாக விளக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

”சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.”

”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.”

”இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal