வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் உடனடியாக இழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் பொன்முடியும் சேர்ந்துள்ளார். பொன்முடியை அடுத்து சிறை செல்லப் போகும் அமைச்சர்கள் என தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என்று லிஸ்ட் போட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும், மணல் கொள்ளை குற்றச்சாட்டில் துரைமுருகன் சிக்கியுள்ளார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி 1 1/4 ஏக்கரில் 130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட பங்களா கட்டி வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் மீது இன்னொரு சுற்று சோதனை நடத்தப்படலாம் எனவும் தெரிகிறது.

நீதிபதி தாமே முன்வந்து எடுத்த பொன்முடி மீது மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. அதேபோல், நீதிபதி தாமே முன்வந்து எடுத்த தங்க தென்னரசு மீதான வழக்கும் நிலுவையில் உள்ளது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கே.என்.நேரு என இந்த பட்டியல் நீள்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில், யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனாலும், அந்த சமயத்தில் அடுத்து யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பு திமுகவில் நிலவுகிறது. இதற்கு காரணம் மத்தியில் ஆளும் கட்சி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

எனவே, திமுகவில் அடுத்த டாகெட் யார் என்பது குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி பாஜக வட்டாரங்கள் கூறும் தகவலின்படி, துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் ஆகியோர் அடுத்த லிஸ்ட்டில் உள்ளதாக தெரிகிறது.

இதுபோன்று முறையாக திட்டமிட்டு திமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனை எப்படி சமாளிப்பது என முதல்வர் ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் டிஸ்கஷன் செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, ஒன்று பாஜகவை இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் அல்லது அக்கட்சி கொடுக்கும் அழுத்தத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், அடுத்தடுத்து அமைச்சர்கள் குறி வைக்கப்படுவதால் தற்காலிகமாக அமைச்சரவையை மாற்றும் யோசனைகளும் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

கடந்த தேர்தல்களில் நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழ்நாட்டில் அந்த அலை வீசவில்லை. 2024 மக்களவை தேர்தல் எதிர்வரவுள்ளதால், பாஜகவை எதிர்க்காமல் விட்டால் அது திமுகவுக்கு பலனளிக்காது. எனவே, பாஜகவை இன்னும் கடுமையாக எதிர்த்துக் கொண்டே. அமைச்சரவையை தற்காலிகமாக மாற்றியமைப்பது குறித்தும் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள். முன்னதாக, அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித்துறை கூடுதலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal