தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் அதிக அளவு பாதிப்பை சந்தித்ததுள்ளது.

இதனால் ஆங்காங்கே சிக்கியிருக்கும் மக்கள் முப்படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் பெரும் உயிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவரை தூத்துக்குடி எம்.பி கனிமொழி பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், புஷ்பா நகரில் மழை வெள்ளத்தால் பல பகுதி வெள்ளக்காடாக இருக்கிறது. இந்த சூழலில் கனிமொழி எம்.பியின் உதவி எண்ணிற்கு புஷ்பா நகரில் இருக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை கேட்டு சம்பவ இடத்திற்கு தேவையான வாகனத்தோடு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி, வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி, தானும் அவர்களுடன் சேர்ந்து அதே வாகனத்தில் மருத்துவமனை வரை கூட்டி சென்றார்.

இதையடுத்து பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கனிமொழி எம்.பிக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து கனிமொழி அவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெள்ள நீர் வடியாமல் இருந்தபோது, இருசக்கர வாகனம், ஜீப், டிராக்டர் என பல வாகனங்களில் பயணித்து, வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் கனிமொழி எம்.பி.!

இந்த நிலையில்தான் இன்றைய தினம், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாநாட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் கனிமொழி எம்.பி.!

இது பற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினோம். ‘‘சார், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு முழங்கால் அளவிற்கும் மேலான வெள்ளப்பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி! ஒரு சில பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான கோபத்தை கனிமொழியிடம் காட்டினார்கள். அவர் எந்தவித கோபமும் படாமல் பொறுமையாக அவர்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு, உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். இது பாதிக்கப்பட்ட மக்களை துயரத்திலும் நெகிழ வைத்திருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal