அ.தி.மு.க.வின் கொடி பெயரை பயன்படுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இடைக்கால தடைவிதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினாலும் அதை ஏற்க தயாராக இல்லை. அதிமுக லெட்டர் ஹெட் பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக கொடி, சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி கட்சி உறுப்பினர்கள் என கூறி வருகின்றனர். மேலும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதாக வாதிடப்பட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு மீண்டும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க.வின் கொடி, பெயரை பயன்படுத்த ஓ-பிஎஸ் தரப்பிற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal