அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் கைது செய்யபட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் (ஜூன் 28-ம் தேதி) இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியிடம் உடல்நிலை குறித்து நீதிபதி அல்லி கேட்டறிந்தார். எப்படி இருக்கிறீர்கள்? என செந்தில்பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி கேட்டார். இன்னும் வலி இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார். இதனையடுத்து ஜூலை 12-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal