வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal