தமிழக சட்டசபை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கிய நிலையில் மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் மாணவரின் மரணம் தொடர்பாக அரசின் விளக்கம் ஏற்படையதாக இல்லை எனக் கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 4 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடியது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9:30 மணிக்கு அவையை சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் திருக்குறளுடன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறைவு பெற்ற நிலையில் முதல்வருக்கும் அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து பேசினார். அவை தொடங்கிய உடனே கர்நாடகாவில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாகவும் அது தொடர்பாக விவாதித்த பிறகு மற்ற விகாரங்கள் குறித்து பேசலாம் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.

இதை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கோவையில் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் கோஷ்டி மோதல் என அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் மாணவர் போதை பொருள் குறித்து தகவல் அளித்ததால் தான் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

இது கோஷ்டி பூசல் அல்ல இது ஒரு படுகொலை. கோவை போலீசார் அமுதனை போதைப்பொருள் குறித்து அழைத்துச் சென்று தகவல் பெற்றிருக்கிறார்கள். இந்த தகவலை குற்றவாளிகளிடம் போலீசார் கூறி இருக்கின்றனர் என பெற்றோரே சொல்கின்றனர். அரசின் அலட்சியத்தால் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் மாணவன் அமுதன் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தகவல் கொடுத்ததாக குற்றச்சாட்டப்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை’’ என்றார்.

அப்போது குறிப்பிட்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘‘கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்தது. திமுக ஆட்சியில் தான் போதை பொருள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்தது. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த தகவலின் அறிக்கையில் அடிப்படையில் 40 சதவீதம் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. போதை பொருள் அதிகரிப்பு காரணமாகத்தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர்.

தாவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால்.. எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தர மாட்டோம்” என பேசினார். மேலும் திமுக ஆட்சியில் இரண்டு அரை வயது குழந்தை திமுக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஒரு புகைப்படத்தை காண்பித்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அமைச்சர் போதை பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியானது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அவை மரபுப்படி கவனயீர்ப்பு தீர்மானத்தின் மீது அரசு பதில் தான் அளிக்க வேண்டும். ஆனால் இங்கு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். அவை முறையாக நடைபெறவில்லை. மேலும் மாணவன் படுகொலை, பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு உரிய பதில் இல்லை என குற்றம் சாட்டி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆக மொத்தத்தில் இன்றைய சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது சட்டசபையில் சரவெடி வெடித்த சத்தம் கேட்டதுதான் பரபரப்பை கிளப்பியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal