நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று அறிவாலயத்திற்கு (25ம் தேதி) வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர்.

திமுகவில் 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அந்த 20 நிர்வாகிகளும் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக மாநில அளவிலான பதவியை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்கிறார்கள்.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம், ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன்பாகவே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்பு தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க குழு அமைத்தார். இந்த குழுவில் 11 பேர் இடம்பெற்ற நிலையில், தொடர்ச்சியாக ஆலோசனை நடைபெற்றது. ஸ்டாலின் லண்டனில் இருந்து சென்னை திரும்பிவிட்ட நிலையில், தற்போது மறுசீரமைப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன.

ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்கும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். அதேபோல் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் யார் என்பதை அடையாள காண ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த பரிந்துரை பட்டியலும் தயாராகிவிட்டது. லண்டனில் இருந்து வந்த பின், தங்கம் தென்னரசு உடன் ஸ்டாலின் நீண்ட நேரம் உரையாடி இருக்கிறார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு எகிறி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையின் போது திமுகவில் இருந்து 20 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் 20 மாவட்டச் செயலாளர்களை ஒரே நேரத்தில் நீக்கினால், அவர்கள் அதிருப்தி அடைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் அவர்கள் மீதும் எந்த நெகட்டிவ் விமர்சனமும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்.

இதனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு மாநில அளவிலான பொறுப்பை கொடுக்க ஸ்டாலின் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களாக வாரிசுகள் நியமிக்க வேண்டாம் என்ற முடிவுக்கும் திமுக தலைமை வந்துள்ளதாக தெரிகிறது. திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயரும் போது, அது களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று தலைமை நம்புகிறது. சீனியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். இதனால் சீனியர்களின் ஆதிக்கத்தையும் குறைப்பதோடு, இளைஞரணியில் இருந்து பலருக்கும் வாய்ப்பு அளிக்க திமுக தலைமை தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

அதே சமயம் தங்களது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டால், அவர்கள் த.வெ.க.விற்கு செல்வதற்கும் தயாராக இருக்கிறார்களாம். எனவே, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சவாலான விஷயம்தான் மா.செ. மாற்றம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal