திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாமானிய மக்களை போல் முகக்கவசம் அணிந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கோயில் வளாகம், அன்னதானம் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதன்பின் பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அந்த உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது விரைவாக தரிசனம் செய்யலாம் என்று கூறி அர்ச்சகர் ஒருவர் ரூ.4 ஆயிரம் பணத்தை அமைச்சர் ரமேஷிடமே ஜிபே மூலமாக பெற்றுள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியது. ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர்கள் இப்படி பணம் பெறுவது பல்வேறு தரப்பினராலும் புகாராக சொல்லப்பட்டு கொண்டே இருந்தது.
இதன்பின் அமைச்சர் ரமேஷ், யார் தவறு செய்திருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதேபோல் அர்ச்சகர் ஐயப்பன் லஞ்சம் பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அறநிலையத்துறை துணை ஆணையர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி அர்ச்சகர் ஐயப்பன் மறு உத்தரவு வரும் வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகருடன் சேர்ந்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த 2 காவலாளிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மொட்டை போட வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அர்ச்சகர் ஐயப்பன் மீது பூஜை செய்ய மட்டும் தடை விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. மற்றவர்களை உடனடியாக பணிநீக்கம் மற்றும் பணியில் இருந்து விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அர்ச்சகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது.
