தமிழக மின்சார வாரிய டெண்டர்களில் நிலவி வந்த முறைகேடுகளைக் களைந்து, புதிய டிஜிட்டல் முறையை அமல்படுத்த அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில், இனி அனைத்துப் பணிகளும் தகுதியின் அடிப்படையில் ஒளிவுமறைவின்றி வழங்கப்படும் என்றும், இடைத்தரகர்களுக்கு இடமில்லாத வகையில் புதிய நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மின் வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் சாதன வினியோகஸ்தர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், மின் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாக, வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் பேசும்போது, இப்போதைய சூழலில் நிலக்கரி கையாளுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டினார்கள். அதனால் இத்தகைய பணிகளைப் பிரித்து வழங்கி, அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் சூரியசக்தி மின் திட்ட முதலீட்டாளர்கள் தங்கள் தரப்பு கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். சூரியசக்தி மின் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து, விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு சூரியசக்தி மின் திட்டங்களை ஈர்ப்பதற்கான தெளிவான கொள்கை வகுக்கப்படவில்லை என்றும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கவனமுடன் செவிமடுத்த அமைச்சர் நிர்மல்குமார், மின் துறையில் நிலவி வரும் முறைகேடுகளைக் களைவதே தற்போதைய அரசின் முதன்மையான நோக்கம் என்று உறுதிபடத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நிர்மல்குமார் ‘‘கடந்த காலங்களில் முறைகேடாக வழங்கப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன. இனிவரும் காலங்களில் முற்றிலும் வெளிப்படையான புதிய டெண்டர் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
மின் வாரியத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்ட்டல் வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கையாளப்படும். இதன் மூலம் எந்தவொரு நபருக்கோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ சாதகமாகச் செயல்படும் பழைய முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்/ தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதையே இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர்களுக்கோ, முறைகேடுகளுக்கோ எந்தவிதமான இடமும் இல்லை.. அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர்கள் வழங்கப்படும், மின் வாரியத்தின் நிர்வாகத்தை ஊழலற்றதாக மாற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது’’ என்று திடமான நம்பிக்கையை தெரிவித்தார்.
இந்த புதிய சீர்திருத்தங்கள் மின் வாரியத்தின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…!!
