தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம் உருவாக்கிய சைட் விசிட், இயந்திரச் சான்றிதழ் முறையை நகராட்சித்துறையில் ஒழித்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் இதை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளாட்சி அமைப்புகள் இனிவரும் காலங்களில் டெண்டர்களின் போது “இடப் பார்வை சான்றிதழ்” (Site Visit Certificate) மற்றும் “இயந்திரச் சான்றிதழ்” (Machinery Certificate) ஆகியவற்றைக் கட்டாயமாகக் கோரக் கூடாது என்று அதிரடி உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த இரண்டு சான்றிதழ்களையும் வழங்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சில அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை மிரட்டி, கைமாறு மற்றும் லஞ்சம் வாங்குவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வதாக நீண்டகாலமாகப் புகார்கள் இருந்து வந்தன. இந்தச் சான்றிதழ்களை அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு மறுப்பதாகவும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த நடைமுறைச் சிக்கல்களையும், லூப்ஹோல்களையும் அடைத்து, டெண்டர் செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்கவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் கட்டுப்பாடுகள் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், கடந்த 2023-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன, தற்போது அவை நீக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்ததாரர்கள் நேரடியாகவே டெண்டர் ஏலத்தில் பங்கேற்கலாம். இதன் மூலம் மிகக் குறைந்த விலைப் புள்ளி கோரும் தகுதியான நபர் (L1 – Lowest Bidder) வெளிப்படையாகத் தேர்வு செய்யப்படுவார். வேலைக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் பணியைத் தொடங்கும் போது, அங்கு போதிய இயந்திரங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது உதவிப் பொறியாளர்களின் கடமையாகும். அதேநேரம் பணியின் போது போதிய இயந்திரங்கள் இல்லை என்றால், அதன் பிறகு ஒப்பந்ததாரர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தகுதியான அனைத்து ஒப்பந்ததாரர்களும் சமமாகப் போட்டியிட முடியும். தேவையில்லாத சான்றிதழ் நடைமுறைகள் குறைவதால், வேலைக்கான ஆணை விரைவில் வழங்கப்பட்டு பணிகள் உடனே தொடங்கும். இந்த வெளிப்படையான நடைமுறையால் அரசுக்குக் குறைந்தது 20% வரை நிதி சேமிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமாராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நகராட்சி துறையில் எடுத்துள்ள சில முக்கியமான முடிவுகள் பற்றியும் பார்ப்போம். அரசு அதிகாரிகள் ஒரு புராஜெக்டில் திட்ட மதிப்பீட்டைத் துல்லியமாகத் தயாரிக்க வேண்டும்; தேவையின்றி திட்ட மதிப்பை உயர்த்தக் கூடாது. அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் காலை 7 மணிக்கே தங்களது கள ஆய்வைத் தொடங்கி, பொது இடங்களின் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

நகராட்சித் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க மாற்றம், பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலைத்துறை போன்ற பிற துறைகளிலும் அமல்படுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த அரசு டெண்டர் நடைமுறைகளிலும் ஊழலை ஒழிக்கவும், அரசுப் பணிகளை விரைவுபடுத்தவும் பெரும் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal