கடந்த மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த அந்த பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டிருந்தார். த.வெ.க. குறித்து பாஸிடிவாகவும் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தலைமைச் செயலகம் சென்ற மு.க.அழகிரி மகள் அமைச்சர்களை சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
முதல்வர் விஜய் பிஸியாக இருந்ததால், அவரை வேறு ஒருநாள் சந்திக்க இருப்பதாகவும், அன்றைய தினம் த.வெ.க.வில் மு.க.அழகிரி மகள் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில்தான், திமுக எம்பி கனிமொழி தமிழக அரசியலுக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே தமிழக அரசியலுக்கு வர நினைத்த கனிமொழியை, தற்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவருமே அழைத்திருக்கின்றனர். இதனால் விரைவில் ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி ஆகிய மூவரும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
‘‘ சார், சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிர்பாராத ஒரு பெரும் பின்னடைவைத் தந்துள்ளன. 59 ஆண்டுக் கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ள சூழலில், திமுகவை அடிமட்டத்திலிருந்து மீண்டும் பலப்படுத்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தீவிரமாக களமிறங்க முடிவு செய்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே கனிமொழி தமிழக அரசியல் பக்கம் கவனத்தை திரும்ப முடிவு செய்திருந்தார். அப்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ரசிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த நேரடியாக அண்ணனிடமே கனிமொழி கேட்ட போது, ‘‘தவறாகிவிடும்மா பிறகு பார்ப்போம்..!’’ என்று மழுப்பலாகவே பதில் கூறிவிட்டார். குடும்ப கட்சி என்று சொல்வார்கள் என்ற ஒற்றை காரணத்தை வைத்து கனிமொழியின் மாநில அரசியல் வருகையை தவிர்த்துவிட்டார் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான், தனது சொந்த அண்ணன் மு.க.அழகிரி மகள் த.வெ.க.வில் இணைந்தால், அது தி-முகவிற்கு சிறிய அளவிலாவது பாதிப்பு ஏற்படுத்தும் என ஸ்டாலின் நினைக்கிறார். இதனால், கனிமொழி மூலமாக பெண்களை திமுக பக்கம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு முன் கனிமொழியின் வீட்டில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையிலேயே கனிமொழியை மாநில அரசியலுக்கு கொண்டு வரும் முடிவு கிட்டத்தட்ட எடுக்கப்பட்டது.
இதன் காரணமாகவே உடனடியாக கனிமொழி பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணிக்க தொடங்கியுள்ளார். டெல்லி அரசியலில் இருந்து தனது கவனத்தை முழுமையாகத் தமிழகத்தின் பக்கம் திருப்பி, மாநில அரசியலில் தீவிரப் பங்காற்ற கனிமொழி திட்டமிட்டுள்ளார். இதற்காக மிக விரைவில் அவர் தமிழகம் தழுவிய பிரம்மாண்ட அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளஇருக்கிறார். ஸ்டாலின், உதயநிதி மற்றும் கனிமொழி மூவரும் பயணிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 தேர்தல் முடிவுகளில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்தது முதற்கொண்டு, ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில், தொண்டர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தவும், தொய்வடைந்துள்ள முகாமைச் சீரமைக்கவும் கனிமொழிக்கு மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இனி பெரும்பாலான நாட்களைத் தமிழகத்திலேயே செலவிட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்துக் குறைகளைக் கேட்க கனிமொழி முடிவு செய்துள்ளார். முதலமைச்சர் விஜய் அரசிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் ‘‘ஹனிமூன் பீரியட்’’ முடிவதற்குள், திமுக தனது உட்கட்சிப் பூசல்களைத் தீர்க்க முடிவு செய்துள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தேர்தல் தோல்விப் பரிசீலனைக் குழுக்களுடன் இணைந்து, கனிமொழியும் நேரடியாகப் பல மாவட்டங்களுக்குச் சென்று ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவுள்ளார். கனிமொழியின் தமிழக அரசியல் வருகை, தவெக அரசுக்கு மிகப்பெரிய அரசியல் குடைச்சலைத் தரும்’’ என்றனர்.
