அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியிருக்கிறது த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களின் நிலைமை!
சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு பிரதிபலனாக தங்களுக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்களை அமைச்சரவையில் இணைப்பதற்கு விஜய் தயங்குவதால் வேலுமணி அணி அதிர்ச்சியாகியுள்ளது.
த.வெ.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் நம்மிடம், ‘‘அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் அணி திரண்டனர். அவர்கள் மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவை கேட்டபோது அவர்கள் எடப்பாடியை எதிர்க்க தயங்கினார்கள். தவெகவுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் மற்றும் வாரிய பதவிகள் கிடைக்கும் என்று ஆசையை தூண்டினார்கள்.
அதை நம்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவெக அமைச்சரவையில் 6 இடங்கள் அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. தவிர, 4 வாரியப்பதவிகள் கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது. தவெக தூய சக்தி, ஊழலுக்கு எதிரானவர்கள், நேர்மையான ஆட்சி என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
அதி.முக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர்களை அமைச்சரவையில் இணைத்தால் தவெக எப்படி தூயசக்தியாக இருக்க முடியும். விஜய்யும் ஊழலுக்கு துணை செல்லும் நபராகவே கருதப்படுவார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களை அமைச்சரவையில் இணைப்பதற்கு விஜய் தயக்கம் காட்டி வருகிறார். ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர், ‘‘அதிமுகவினரால் நம் கட்சி மீதும் ஊழல் கரைபடியும். இது நம்முடைய எதிர்காலத்திற்கு சரியாக இருக்காது’’ என்று எச்சரித்துள்ளார். தேர்தல் நேரத்தில் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
அதையும் மீறி பதவி கிடைக்கும் என்பதால் வேலு மணி, சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சாய்ந்துள்ளனர். அதிமுகவினரை அமைச்சரவையில் இணைத்தால் தவெக மீதான பிம்பம் மாறும், திமுகவுக்கு அரசியல் செய்வதற்கு பெரிய வாய்ப்பாகவும் மாறிவிடும் என்பதால் விஜய் தீவிர யோசனையில் இருக்கிறார். தவெக நல்ல தகவல் சொல்லும் என்று நம்பி அதிமுகவினர் பலர் அதிருப்யடைந்துள்ளனர்.
கே.சி வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். நமக்கு நிச்சயமாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும். பொறுமையாக இருங்கள் என்று வேலுமணி, சி.வி சண்முகம் தங்களின் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி வருகிறார்கள். ஒரு சில நாட்களில் அது நடைபெறாவிடில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் அப்படியே எடப்பாடிக்கு பக்கம் செல்வதற்கு வாய்ப்புள்ளது’’ என்றனர்.
