1977 எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய், அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி வந்த நிலையை முறியத்தவர், இன்றைக்கு இரு துருவ அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் எதிர்கட்சியினரை ஆளும்கட்சியினர் மரியாதை நிமித்தமாக வணக்கம்கூட தெரிவித்துக்கொள்ளாத சூழலையை மாற்றியிருக்கிறார் விஜய். அதாவது, தமிழகத்தில் எதிரெதிராக செயல்படும் ‘இரு துருவ’ அரசியலுக்கு முற்றுப்புள்ளி!
மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோவையும் சந்தித்திருக்கிறார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
