தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 18ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
வரும் 18ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமி பூஜை நடைபெற்றுள்ளது. பிரதமர் வருவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக பாஜக-வினர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் நாளை பாஜக செயல்வீரர்களுடன், வாக்குச்சாவடி தொடர்பாக பிரதமர் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். .
