காரைக்குடி பரப்புரைக்கு செல்லும் விஜய், இடையில் சைக்கிளில் சென்றபோது, தொண்டர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் விஜய் தனது கட்சி தொண்டர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரச்சார வாகனத்தில் சென்றார். திருப்பத்தூர் அருகே விஜய் பிரச்சார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை முடித்துக் கொண்டு விஜய் புறப்பட்ட நிலையில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானோர் வருகை தருவதால் பிரச்சார வாகனத்தால் தற்போது வரை பிரச்சாரம் செய்ய அனுமதி வாங்கிய இடத்தை அடைய முடியவில்லை.
விஜய்யின் ஒவ்வொரு பரப்புரைக்கும் 50 -க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதை யாரும் மதிப்பதே இல்லை. விஜய்யின் வாகனத்தை நோக்கி துண்டுகளை வீசுவது, பை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏற முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் காரைக்குடி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய 12 மணி முதல் 2.30 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2.30 மணியை தாண்டியும் அவரால் ரசிகர்கள் கூட்டத்தில் ஊர்ந்து செல்ல முடிகிறதே தவிர, சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை.
இதனால் அவர் சைக்கிளில் இறங்கி பயணம் செய்தார். இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் அவரது பின்னால் ஏராளமானோர் ஓடி வந்தனர். அப்போது விஜய் கூட்டத்தில் மேலும் சிக்கிக் கொண்டார். இதையடுத்து போலீஸாரும் சைக்கிள் செல்ல முன்கூட்டியே சொல்லவில்லை என்றனர். இதனால் சைக்கிளில் இருந்து இறங்கிய விஜய் பிரச்சார வாகனத்தில் செல்ல முயன்ற போது கூட்டம் முண்டியடித்ததால் விழும் நிலைக்குச் சென்றார். உடனே அருகே இருந்த பவுன்சர்கள் பிடித்துவிட்டனர். இதையடுத்து பிரச்சார வாகனத்தில் ஏறி சென்றார். விஜய்யை காண காரைக்குடியில் பிரச்சாரம் செய்யும் இடம் அருகே கடும் வெயிலில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர்.
இதையடுத்து ஒரு வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டிய இடத்திற்கு வந்த நிலையில் நேரம் தாண்டியதால் பிரச்சாரம் செய்யாமல் சென்றுவிட்டார். இதநால் கூட்டத்தில் வெயிலில் தண்ணீர் இல்லாமல் காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல் போடப்பட்ட விஜய்யின் பிரச்சார கூட்டங்கள் நடந்து வந்தன. ஆனால் காரைக்குடியில் திறந்தவெளியில் பலரும் வெயிலில் காத்திருந்தனர். நல்ல வேளையாக யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
