அசாமில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 31 தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.
அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில், பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு 31 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. குவாஹாட்டியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா முன்னிலையில் மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அசாமில் பொது சிவில் சட்டம் இயற்றப்படும், பூர்வ குடிகளின் நிலம், பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மீட்டெடுக்கப்படும், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,250-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்படும், வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு கட்டமைப்பை வலுப்படுத்த முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.18,000 கோடி செலவிடப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம், ஒரு பொறியியல் கல்லூரி ஆகியவை உருவாக்கப்படும், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.25,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
நிகழ்ச்சியல் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘‘அசாமை நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக நாங்கள் மாற்ற விரும்புகிறோம். நாட்டை கட்டமைக்க அசாமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் இதைக் கருத்தில் கொண்டே 31 உறுதிமொழி பத்திரத்தை (சங்கல்ப பத்திரம்) நாங்கள் தயாரித்துள்ளோம்’’ என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், மாநில பாஜக தலைவர் திலிப் சைக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக் கூட்டணியில் அசாம் கன பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் உள்ள பாஜக, மூன்றாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் வலிமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது.
