நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிரச்சாரம் களைகட்ட உள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.வி. சண்முகம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தமிழ் சினிமா உலகையே உலுக்கியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் நோக்கில் பேசியவர், நடிகை நயன்தாராவின் பெயரை அவசியமின்றி இழுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு முன்னர் ராதாரவி உள்ளிட்டோர் தன்னைப்பற்றி அவதூறாக பேசியபோது உடனடியாக அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்த நயன்தாரா, தற்போது நேரடியாக எந்த கருத்தும் வெளியிடாமல் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூசக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அன்பு குறித்த ஒரு தத்துவ வரியை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோல் உங்கள் அன்பு இருக்க வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாரா தன்னைப்பற்றிய சர்ச்சைக்கு சூசக பதிலடி கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர்

தன்னைப் பற்றி யார் பேசினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அன்பாக இருப்போம் என அவர் சொல்லாமல் சொல்வதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். மனைவிக்கு எதிரான கருத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் இதுவரை நேரடி பதில் தரவில்லை என்பது சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. இருப்பினும் நடிகை நயன்தாரா பற்றி இழிவாக பேசிய சிவி சண்முகத்தை மறைமுகமாக கண்டித்து நடிகை குஷ்பு ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் அவர் சிவி சண்முகத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

பாஜக நிர்வாகி குஷ்பு சுந்தர், “நடிகைகள் விவாதத்திற்கான கருவிகள் அல்ல; யாரையாவது கிண்டல் செய்ய பெண்களின் அடையாளத்தை பயன்படுத்துவது அவரின் மனநிலையை காட்டுகிறது” என்று கூறினார். எனினும் சி.வி. சண்முகம் என்று பெயர் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்தது. “பெயரில்லா கண்டனம் என்ன பயன்?” என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் உட்பட பலதரப்பு கண்டனங்கள் கொட்டும் நிலையில், இந்த சர்ச்சை இன்னும் தணியவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal