டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியா? என்.டி.ஏ.வுடன் கூட்டணியா என விஜய் இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். இதனால் தமிழகத்தில் ஜனநாயக திருவிழா தொடங்க இருக்கிறது.

தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள சூழலில் தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு நிறைவு செய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த முறை புதிதாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இணையப்போகின்றதா என்ற கேள்வி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஏற்கனவே தனித்து தான் போட்டி, பாஜக கொள்கை எதிரி என விஜய் பலமுறை சொல்லியிருந்தாலும் கூட அதிமுக பாஜக கூட்டணியில் விஜய்யை இணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு தரப்பு வாக்குகளையும் விஜய் பிரிப்பார் என்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக விரும்புகிறது.

இதற்காக முதலில் விஜய்யிடம் 45 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் இதற்கு தவெக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் தவெக மாவட்ட செயலாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும் பலரும் என்.டி.ஏ கூட்டணிக்கு செல்ல சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.ஆனால் விஜய் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. இந்த சூழலில் தான் விஜய் இன்று சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் தான் தற்போது புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி விஜய்க்கு 60 சீட் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 60 தொகுதிகளில், கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியும் வழங்க தயார் என்று பாஜக ஆஃபர் கொடுத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிரிந்தால் தேசிய ஜனநாயாக கூட்டணி வெற்றி பெறுவது கடினம் என்பதால், எந்த வாய்ப்பையும் விடக்கூடாது என்பதில் பாஜக தலைமை சீரியஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் விஜய் முதல்வர் பதவியை குறிவைப்பதாகவும் பேச்சுவர்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்க இதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யிடம் பல்வேறு வழிகளிலும் பாஜக இதற்காக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், தென்னிந்தியாவை சேர்ந்த துணை முதல்வர் ஒருவர் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பாஜக மேலிடம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர இறுதிகட்ட முயற்சியாக ஆஃபரை அதிகரித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதால், நாளையோ அல்லது அதற்கு அடுத்த நாளோ விஜய், தேசிய ஜனநாயக கூட்டணி செல்வாரா? இல்லையா என்பது தெரிந்துவிடும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal