தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதிக்குட்பட்ட குடும்பங்களுக்கு ‘எலெக்ஷன் கிஃப்ட்’ வழங்கப்பட்டு வருகிறதாம்.

கடந்த பொங்கலின் போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு கொடுத்தாலும், ‘ரொக்கப் பணம்’ கொடுக்கவில்லை. ஆனால் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் சீனியர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கலுக்கான கிஃப்ட் வழங்கப்பட்டு வருகிறதாம். அதாவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கொடுத்து வருகிறது. அதை வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு அக்கடையின் அருகிலேயே ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’ கொடுக்கப்படுகிறதாம். அந்த பெட்டியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும், தட்டு, குக்கர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதாம்.
2026ம் ஆண்டு கே.என்.நேரு தரப்பால் கொடுக்கப்படும் ‘எலெக்ஷன் கிஃப்ட்’ என்ற குதூகலத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் மேற்தொகுதி மக்கள். இது ஆரம்பம்தான்…. இன்னும் நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறதாம்.
