தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவை கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி MP தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், முனைவர் கோவி.செழியன், முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முனைவர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அத்தேர்தலில் 40/40 வெற்றி பெற்றது தி.மு.க கூட்டணி. இப்பொழுதும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் கனிமொழி, தமிழரசி உள்ளிட்ட இரண்டு பெண்கள் உள்ளனர்.தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம். அப்துல்லா, டாக்டர் எழிலன் உள்ளிட்ட அறிவார்ந்த அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் அவர்கள் வன்னியர் பொது சொத்து நல வாரியத் தலைவராகவும், CMDA துணைத் தலைவராகவும் இருந்தார்.

இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal