கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த விசாரணை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருக்கிறது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. பின்னர், சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பு சுப்ரீம்கோர்ட்டினை அணுகி, சிபிஐ விசாரணை நடத்த கோரியிருந்தது. பின்னர் சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: ‘‘கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும்.
அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
