‘‘தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் திமுக மிரட்டலுக்கு பயப்படக்கூடாது. எஸ்.ஐ. .ஆர் மூலம் கள்ள ஓட்டுகளை நீக்கினால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்ற அச்சத்தில் திமுக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக மதுரை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் அளித்த பேட்டியில், ‘‘மதுரை மாநகர் வடக்கு தொகுதியில், தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஆய்வு செய்தார்.
அப்பொழுது அந்த பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்களிடம், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர். பணி நேர்மையாக நடத்தப்பட வேண்டும், திமுக நிர்வாகிகளின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் நீங்கள் அடிபணிய கூடாது. இறந்தவர் வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் மாறிபோன வாக்காளர்களை நீக்க வேண்டும். மேலும் உண்மையான வாக்காளர்கள் யாரும் விட்டு போக கூடாது. திமுகவினர் யாருக்கும் படிவங்களை வழங்க கூடாது. நீங்களே வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து படிவங்களை வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘‘தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் திமுக இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. நீதிமன்றமோ சரியான சம்பட்டி அடியை கொடுத்து விட்டது. தற்பொழுது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் இந்த எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக செய்யும் குளறுபடி குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் விழிப்புடன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக தற்போது குறுக்கு வழியை மேற்கொண்டு, எப்படியாவது தங்களின் போலியான வாக்காளர்களை காக்க, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறோம் அதனால் தங்களுக்கு சாதமாக நீங்கள் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு மிரட்டலும், மிரட்டலும் விடப்பட்டதாக செய்திகள் வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கும், திமுகவிற்கும் 2 லட்சம் தான் வாக்குகள் வித்தியாசம். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 சதவீதம் வாக்குகளை இழந்தது. தற்போது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர்.பணி மூலம் போலி வாக்குகளை நீக்கினால் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வரமுடியாது என்ற அச்சத்தில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தற்போது வாக்காளர்கள் 27,40, 631 உள்ளனர். தற்போது இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளில் 3,076 நிலை அலுவலர்களும், 290 மேற்பார்வையாளர்கள் ,மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இதில் கட்சியின் சார்பில் பி.எல்.ஓ.2 உள்ளனர் ஆனால் சில இடங்களில் திமுக பாக முகவர்களே விண்ணப்பம் வடிவங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஆகவே பொதுமக்கள் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஏனென்றால் போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக பல்வேறுசெய்தி வருகிறது’’ என கூறினார்.
