கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் சீனியர்கள் பல தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் பலர் போட்டியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘மெகா கூட்டணி’ அமைப்பேன் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி அமைக்கத் தவறிவிட்டார். தவிர, அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களே தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில், ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை யார் கொடுத்தார்களோ அவர்களுக்கு சீட்டைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், யாரும் வெற்றி பெறவில்லை. பல வேட்பாளர்கள் இன்னும் கடனில் தத்தளித்துக் கொண்டருக்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வருவோம்….

விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மாநில அரசியல் களத்தை மாற்றிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பல தொகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில், அதிமுக பல முக்கிய தொகுதிகளை இழக்க நேரிடும், அனைத்திலும் ‘அசுர’ பலத்துடன் இருக்கும் திமுக கூட்டணியை அதிமுக கூட்டணி எதிர்த்துப் போட்டியிடுவது கடினம். இதற்கு தவெகவின் வசீகரம் தேவை.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள.. தனியாக கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தேர்தல் நேரத்தில் மாறலாம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதம் இருக்கிறது. அதற்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் இப்போதைக்கு விஜய் தனியாக இருக்கிறார். ஏனென்றால் அவரின் கட்சியில் கூட்டணி எதுவும் இல்லை. இப்போதைக்கு அதிமுக கூட்டணியும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்.

தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தவிர, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை எப்போதுமே விட்டமினை இறக்கும். ஆனால், இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டமினை இறக்கவில்லையாம். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் ‘உங்களுக்குத்தான் தொகுதி செலவுகளை எல்லாம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் 20 கோ…. ரெடி பண்ணி வச்சுக்கங்கோ… குறைந்தது 15 கோ… வாச்சி வேணும்’ என்று சொல்லிவிட்டாராம்.

தலைமை கொடுக்கும் என்று எதிர்பார்த்த சீனியர்களுக்கு இது பெரும் இடியாக தலையில் இறங்கியிருக்கிறது. இதனால், ‘20 கோ….’ செலவு செய்து அமைச்சரானால் போட்டதை எடுத்துவிடலாம். எம்.எல்.ஏ.ஆனால் என்ன செய்வது? விஜய் நம் பக்கம் வரவில்லை என்றால் எம்.எல்.ஏ.க்கூட ஆக முடியாது. என பல சீனியர்கள், ‘நான் போட்டியிடவில்லை… கூட்டணியைப் பார்த்துக்கொண்டு முடிவு செய்கிறேன்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள்’’ என்றனர்.

எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றத் தேர்தலைப் போல் சட்டமன்றத் தேர்தலிலும் தொழிலதிபர்களை களத்தில் இறக்கி விடுவாரோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal