“திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திருவண்ணாமலையிலும் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் திமுகவின் சமூக நலத்துறை அமைச்சரே பேசியுள்ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.
50 மாத திமுக ஆட்சியில் 6,400 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இவ்வளவு கொடுமைகளுக்கு இடையிலும் இதுவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. தங்களுக்கு வேண்டியப்பட்டவரை டிஜிபியாக்க முயற்சி செய்கிறார்கள்.
21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 8 முறை இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்கள் பெயர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இதுபோல உள்ளவர்களை நீக்கி, தகுதியானவர்களை இடம்பெற செய்வதே எஸ்ஐஆர்.
ஆனால், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். காலக்கெடு போதாது என்கிறார்கள். இதற்காக பிஎல்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது, எனவே இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்களை நீக்கக்கூடாது என திமுகவினர் சொல்கின்றனர். ஏனெனில் தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள்.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்துக்கொடுத்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்
