அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.44 லட்சம் நண்கொடை வழங்கியிருப்பதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் தினமும் பல கோடிகள் வருமானம் கொட்டுகிறது.

திருப்பதி கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் (TTD) ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை மூலம் இலவசமாக மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசியாறி ஏழுமலையானை மனமுருக தரிசித்து வருகின்றனர். இந்த அன்னதானச் சேவைக்கான ஒருநாள் முழுச் செலவான ரூ.44 லட்சத்தை நன்கொடையாக அளிக்கும் திட்டம் உள்ளது.

காலை ரூ.10 லட்சம், மதியம் ரூ.17 லட்சம் மற்றும் இரவு ரூ.17 லட்சம் என மூன்று வேளைக்கான அன்னதான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும். நன்கொடையாளர் ஒரு குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க நன்கொடை (ரூ.44 லட்சம்) அளித்தால், அவர் பெயரும் கோயிலைச் சுற்றியுள்ள காட்சிப் பலகையில் காண்பிக்கப்படும்.

அந்த வகையில் நேற்று (9ம் தேதி) திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு திருப்பதி திருமலை கோயிலில் அன்னதானம் வழங்கியுள்ளார்.

இதற்காக அவர் ரூ.44 லட்சம் கொடுத்த நிலையில், ‘இன்றைய நாள் (09.11.2025) நன்கொடை வழங்கியவர் கே.என்.நேரு’ என்று நேற்றைய தினம் திருப்பதி திருமலை அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று கே.என்.நேருவின் பிறந்தநாள் என்பதால் அவர் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

திமுக தலைமை தந்தை பெரியாரின் ‘கடவுள் மறுப்பு’ கொள்கையை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் உலகப்புகழ் பெற்ற கோயிலுக்கு ரூ.44 லட்சத்தை அள்ளிக்கொடுத்துள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.

தவிர, நகர்ப்புவளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டியிருப்பதோடு, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைவருக்கு புகார் கடிதமும் எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal