மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்திய, தி.மு.க., ஒன்றிய செயலரின், ஐந்து டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே டி.உடையாபட்டியில் இ ருந்து, மணப்பாறை தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கிய சாமி என்பவர், சட்ட விரோதமாக, உரிய அனுமதியின்றி, கிராவல் மண் கடத்துவதாக, அப்பகுதி மக்கள் திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தனர்.
எஸ்.பி., தனிப்படையினர் நேற்று நடத்திய சோதனையில், கிராவல் மண் கடத்திய, ஐந்து டிப்பர் லாரிகளை, 20 யூனிட் மண்ணுடன் பறிமுதல் செய்தனர். லாரிகள் அனைத்தையும் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, லாரிகளை ஓட்டி வந்த வீராச்சாமி, 38, முத்துக்குமார், 32, சரவணன், 42, ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல், திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் தி.மு.க. பிரமுகர்கள் அனுமதியின்றி கிராவல் மண் மற்றும் மணல், ஜல்லி (அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து) கற்களை கடத்தும் லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

