தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மூன்று கட்சிகளிலும் வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், மதுராந்தகத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேய தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வளர்ந்தார். அந்த தலைவரையே கொச்சைப்படுத்தியுள்ளனர். 21 நாட்கள் ஒவ்வொரு கட்சிக்காரன் மனதிலும் கலைஞர், தளபதியை பற்றி இழிவுபடுத்தி பேசியவர்களை நினைத்து பணியாற்ற வேண்டும். வேறு எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம்.

அப்படி பணியாற்றினால் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் மிகப்பெரிய வெற்றி பெறுவார். வேறு யாரும் கோச்சுக்காதீங்க. சட்டசபையில் இப்படி ஒரு ஆள் தேவை. எந்த பணி செய்தாலும் சிறப்பாக செய்வார். எந்த கருத்தையும் சரியாக பேசுவார். எழும்பூர் எம்எல்ஏவாக இருந்தபோது அற்புதமாக செயல்பட்டார். இவர் சட்டசபைக்கு செல்வாரே ஆனால் 3 மாதங்களில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான எல்லா வேலையும் செய்வார். நான் அதை உறுதியாக சொல்கிறேன்.

மதுராந்தகத்தில் நாம் வென்றால் ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும். அது நம் தொண்டர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் கையில் உள்ளது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் வாய்ப்பு நம் கையில் உள்ளது. தமிழ்நாடு மாற வேண்டும் என்றால் இந்த 21 நாட்கள் வேலை செய்ய வேண்டும். 15 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வதில் தொடங்கி, பிரச்சாரம் முடியும் வரை தீயாக பணியாற்ற வேண்டும். இந்த 3 வாரம் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.

சபரிமலைக்கு மாலை போட்டால் 48 நாட்கள் எப்படி இருப்போமோ, மேல் மருவத்தூர் போவதற்கு எப்படி இருப்போமே அப்படி இந்த 3 வாரம் இருக்க வேண்டும். இந்த 21 நாட்கள் ஒவ்வொரு தொண்டனும், திமுகவின் வரலாற்றை, தமிழகத்தின் எதிர்காலத்தை நிரூபிக்க வேண்டும். வைராக்கியத்துடன் பணியாற்றினால் பரந்தாமன் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’’என்றார்.

ஆர்.எஸ்.பாரதியின் அதிரடி பேச்சு அரசியலில் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal