திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் விஜய்யின் மேனேஜரும், ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், அவருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் மேனேஜரும், ‘ரூட்’ (The Route) நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்யின் நிழலாகவும், அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும் பயணித்து வருபவர் ஜெகதீஷ் பழனிசாமி. விஜய்யின் சினிமா கால்ஷீட்கள், வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவு மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளிலும் ஜெகதீஷ் முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், கட்சியின் முக்கியத் தேர்தல் சோதனையான இந்த இடைத்தேர்தலில், வலுவான மற்றும் தனக்குத் தெரிந்த ஒருவரை களம் இறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கு.ப.கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவ், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் திருச்சி கிழக்கு தொகுதியில் சீட் பெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் கு.ப.கிருஷ்ணனுக்கு ஏற்கனவே வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் வெல்லமண்டி நடராஜனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சொந்த மகனையே வெற்றிபெற வைக்க முடியவில்லை.
திருச்சியில் வெல்லமண்டி நடராஜனுக்கு என்று சொந்த செல்வாக்கு என்று பெரிதாக இல்லை. திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய ஆதரவை தவெகவுக்கு அளித்திருப்பதால், தனது இடத்தை நிரப்ப தன்னுடைய மேனேஜருக்கு சீட் கொடுக்கவே விஜய் முடிவு செய்வார் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப ஜெகதீஷ் பழனிசாமிக்கான முக்கியத்துவத்தையும் விஜய் அதிகரித்து வருகிறார்.
டெல்லிக்கு ஜெகதீஷ் பழனிசாமியை உடன் அழைத்து சென்ற விஜய், டெல்லியில் இருந்து சென்னை வந்தபின் அவரின் புதிய வீட்டின் நிகழ்ச்சியிலும் நேரடியாக பங்கேற்றார். அதேபோல் அதிகாரிகள் பலரும் முதல்வர் விஜய்யிடம் பேசுவதற்கு முன் ஜெகதீஷிடம் சார் என்ன மூடில் இருக்காரு என்று கேட்டு தெரிந்த பின்னரே பேச தொடங்குகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
