2016 சட்டமன்ற தேர்தலில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவுவை வீழ்த்தி இன்பதுரை வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த அளவில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஜெயலலிதா தலைமையில் களமிறங்கியிருந்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்து. குறிப்பாக ராதாபுரம் தொகுதியில், ஐ.எஸ்.இன்பதுரை ஜெயித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இங்குதான் பிரச்சனையே வெடித்தது. அதாவது, தபால் ஓட்டுகளை முழுமையாக எண்ணாமல் வெற்றியை தேர்தல் ஆணையம் அறிவித்துவித்துவிட்டது என்று அப்பாவு நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இதுபோன்ற தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வர கால தாமதமாகியிருக்கிறது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அப்பாவு வெற்றி பெற்றிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை இன்பதுரையால் கேட்டு பெற முடியாது.

அதேபோல 2016 முதல் 2021 வரை காலத்தில் ராதாபுரம் தொகுதியின் எம்எல்ஏ என்கிற இடத்தில் எங்கெல்லாம் இன்பதுரையின் பெயர் இருக்கிறதோ! அங்கெல்லாம் அப்பாவு பெயர் மாற்றியமைக்கப்படும். சட்டமன்ற ஆவணங்களில் தொடங்கி எல்லா அரசு ஆவணங்களிலும் இந்த மாற்றம் செய்யப்படும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பு குறித்து பேட்டியளித்திருந்த அப்பாவு, கால தாமதமாக தீர்ப்பு வந்திருந்தாலும் நீதி வென்றிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பதவிக்காலம் முடிந்த பின்னர் எம்எல்ஏ தகுதி நீக்கம் தீர்ப்பு வந்திருந்தாலும், இன்பதுரைக்கு இந்த தீர்ப்பு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக நிதி மற்றும் சலுகைகள் பறிபோகும். அதாவது, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் பெற்ற சம்பளம், தினசரி படிகள் மற்றும் இதர நிதியுதவிகளை அரசிடம் அவர் திரும்ப ஒப்படைக்க நேரிடலாம். ஒருமுறை எம்எல்ஏ-வாக இருந்தாலே ஆயுள் முழுவதும் வழங்கப்படும் முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற சலுகைகள் இன்பதுரைக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal