சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுதற்காக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.
கடந்த ஜனவரி மாதம், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான அன்பழகனை வீழ்த்தி வெற்றிபெற்றார். சட்டமன்ற நடைமுறைகளில் அவருக்குள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டே, அவரை சபாநாயகர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் சார்பில் யாராவது வேட்புமனுத் தாக்கல் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை அவ்வாறு தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை இதற்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் நடைபெறும்.
இதற்கிடையே மு.க.ஸ்டாலினை இன்று முதல்வர் விஜய் சந்திக்கும் பட்சத்தில் தி.மு.க. சார்பில் யாரும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடாத பட்சத்தில், ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது.
