வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் பறக்கும் படை சோதனையில் தி.மு.க. வேட்பாளர் புகைப்படத்துடன் ‘டம்மி’ (போலி) வாக்குப் பதிவு இயந்திரம் சிக்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே காவல்துறையுடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 100 டம்மி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) இருந்தது தெரியவந்தது. மேலும், திமுக ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தின் புகைப்படங்கள் அடங்கிய கார்டுகள் கொண்ட 5 பார்சல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அண்ணாநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். விசாரணையில் பார்சல் கொண்டு சென்ற நபர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், ஆட்டோ ஓட்டி வந்தவர் அண்ணா நகரைச் சேர்ந்த கணேசன் என்பதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட டம்மி இவிஎம் இயந்திரங்களை தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்ததும், வாக்கு சேகரிப்பின்போது வைத்திலிங்கம் புகைப்படம் ஒட்டிய இந்த டம்மி மிஷினை காட்டி வாக்கு சேகரிக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டம்மி மெஷின்கள் காட்டி வாக்கு சேகரிப்பது தொடர்பான முறையாக அனுமதியும், இதுகுறித்து வாக்காளர் செலவினங்களில் காண்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
