உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாம்பழம் சின்னம் முடக்கோரிய வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், சட்டத்தில் அனுமதி இருந்தால், இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கலாம். அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தரமாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal