‘இண்டியா கூட்டணியை என்.டி.ஏ. கூட்டணியால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் (12 சதவீதம் வித்தியாசம்) உயரத்தில் இருக்கிறது’ என அமைச்சர் கே.என்.நேரு ‘தில்’ பேட்டி கொடுத்திருக்கிறார்.

‘சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவிகித வாக்குகள் என்பதே கூட மிகக் குறைந்த கணக்குதான் என்பதை 2026 தேர்தலில் திமுக அடையப்போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்’’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ‘‘தமிழ்நாட்டு பெண்களின் ஆதரவை பெற்று அசைக்க முடியாத அரசாக திமுக அரசு விளங்குவதாக கூறிய நேரு, பெரும்பான்மை பெண்கள் முடிவு எடுத்துவிட்டார்கள்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள Mood of the Nation கருத்துக்கணிப்பில் இன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால், திமுக தலைமையிலான கூட்டணி 45 சதவிகித வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 48ஆக இருந்தது. தற்போது 3 சதவிகிதம் குறைந்தாலும், 45 சதவிகித வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் என்டிஏ கூட்டணி ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடந்தால் 37 சதவிகித வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 சதவிகித வாக்குகள் குறைந்து 33 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் தவெக 15 சதவிகித வாக்குகளை பெறுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக ஆட்சி மீண்டும் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சட்டசபைத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்பும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியாக இருப்பதை காட்டுகின்றன. நேற்று டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்ப்பிக்கின்றன. பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னிலையில் உள்ளது என தலைப்பிட்டு டெக்கான் க்ரானிகல் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும், 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவிகித வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா டுடே பத்திரிகையும், சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் என்டிஏ கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவு தான் இருக்கிறது. வித்தியாசம் 12 சதவிகிதம் என்பதால், தொட கூட முடியாத உயரத்தில் திமுகவை மக்கள் உயர்த்தி பிடித்துள்ளனர். 2019 லோக்சபா தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி உள்ளது.

2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன. தமிழ்நாடு பெண்களின் நம்பிக்கையையும், பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக திமுக அரசு விளங்குகிறது. மீண்டும் திராவிட மாடல் 2.0 அரசை மீண்டும் அமைக்க பெண்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும். அதேபோல் 45 சதவிகிதம் என்பதே கூட மிகக் குறைவான கணக்கு தான் என்பதை 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal