ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு போட்டிருப்பதுதான் ‘வாய்ஸ் ஆஃர் காமன்ஸ’ நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தவெகவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் காவல் துறை, அரசு தரப்பையும் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த நிலையில் ரோடு ஷோவுக்கு வழிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் பல்வேறு கட்சியினர் கரூர் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். ஆனால் தவெகவினர் எங்கு சென்றீர்கள். தவெக ஒரு கட்சியா? கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்து கொண்டிருந்த போது தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் ஆகியோரை விட்டுவிட்டு விஜய் வெளியேறியிருக்கிறார். அவருக்கு தலைமைப் பண்பே இல்லை என கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன் ஆதவ் அர்ஜுனாவை நீதிபதி செந்தில் குமார் விட்டு வைக்கவில்லை. கரூர் சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து ஆதவ் அர்ஜுனா ஒரு ‘பதிவு’ போட்டிருந்தார். அந்த பதிவை காவல் துறை தரப்பு நீதிபதியிடம் காட்டியது. அதை பார்த்த நீதிபதி, ‘‘ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்னை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?. புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளாராம். இதற்காக டாப் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் மறுத்துவிட்டதால் டெல்லியில் முக்கிய புள்ளியின் அறிவுறுத்தலின் பேரில் வேறு ஒரு வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் இந்திய ஒருமைப்பாடுக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியிருந்ததால் ஆதவ் சென்னை வந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal