‘தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்தினேன்’ என செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘செங்கோட்டையனுக்கு இந்தமுறை போட்டியிட சீட்டே கிடையாது’ என ஈரோடு நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் கொந்தளித்துப் பேசியிருக்கிறார்.
மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் காலங்களில் முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் உட்கட்சி விவகாரம் தொடர்பாக பத்திரியாளர்களை சந்தித்து பேசியது கிடையாது. ஆனால், அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு உட்கட்சி விவகாரங்களை ஓ.பி.எஸ். பொதுவெளியில் பேசினார். ‘ஓ.பி.எஸ்.ஜெ.வின் சமாதியில் அமரச் சொன்னது நான்தான்’ என பா.ஜ.க.வின் முகமாக பார்க்கப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி ஓபனாக பேசினார்.
அடுத்ததாக, செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், ‘அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது. ‘எனவே, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி துவங்க வேண்டும்; இல்லையெனில், நானே இணைப்பு பணியில் ஈடுபடுவேன்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், செங்கோட்டையன் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்துள்ளார். இது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காலை கோவை வந்த செங்கோட்டையன், டில்லி கிளம்பிச் சென்றார். ”மனம் சரியில்லாததால், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறேன். பா.ஜ., தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை,” என நிருபர்களிடம் கூறினார். ஆனால் நேற்று இரவு அவர் டில்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டில்லியில் இருந்து கோவை திரும்பிய செங்கோட்டையன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘‘நேற்றைய தினம் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். டில்லி சென்ற உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அரசியல் சூழல் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கட்சி வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஆகவே கருத்துகள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்று நடக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்ப தங்களின் விருப்பங்களை தெரிவிக்கும் நோக்கத்தில் ஒவ்வொருக்கும் இருக்கும் ஜனநாயக உரிமை அடிப்படையில் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
அமித்ஷாவை சந்திக்கும்போது ரயில்வே அமைச்சர் வந்தார். அவரிடம், ‘ ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்கூட்டியே செல்வதால் மாணவர்கள், வியாபாரிகள் செல்வது கடினமாக உள்ளது. அதிகாலை 3 சென்னை சென்றடைகிறது. அதனை மாற்றினால் உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அதனை குறிப்பிட்டு தாருங்கள் பரிசீலனை செய்வதாக கூறினார். மக்கள் பணி செய்வதற்கும், கட்சி வலிமை பெறுவதற்கும் உங்களின் ஒத்துழைப்பு முக்கியம்’’ இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் மற்றும் அந்தியூர் தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டகளும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘துரோகம் செய்பவர்களுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை. உட்கட்சி விவகாரங்களை செங்கோட்டையன் என்னிடம் தனியாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
கடந்த முறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் நிழாலாக இருந்தவர்கள் டிரான்ஸ்பர் முதற்கொண்டு டெண்டர் வரை என்னவெல்லாம் செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அப்போது கூட, ‘அண்ணே… கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’என்று சொன்னேன். நான் அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். ஆனால், அவர் கட்சிக்கும், எனக்கும் எதிராக சில ‘சதி’ வலைகளை பிண்ண ஆரம்பித்தார். அதனால்தான் கட்சியிலிருந்து நீக்கினேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு கோபியில் போட்யிட சீட்டே கிடையாது-’’ என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி பொங்கியதாக தெரிகிறது.
எடப்பாடியின் எண்ணவோட்டத்தை முன்பே அறிந்துதான், ‘நமக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை’ என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!