‘என்னோடு எரியாவுல வந்து… என்னா பேசுறீங்க…’ என நிருபர் ஒருவரிடம் கெத்தாக பேசுவார் அமைச்சர் கே.என்.நேரு. இன்றைக்கு நேருவின் ஏரியாவில் (திருச்சி) மக்கள் சந்திப்பை நடத்த முயற்சிக்கும் த.வெ.க. தடுமாறி வருகிறது.
தவெக தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியில் சுற்றுப் பயணம் தொடங்க இருக்கிறார். அதே நாளில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார். இதற்காக காவல் துறையிடம் அதிகாரிகளிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று மனு அளித்து வருகிறார். ஆனால், காவல் துறை பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி தர மறுப்பதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் திருச்சியில் நேரடியாக சென்று காவல் அதிகாரிகளிடம் பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு அளித்தார்.
அப்போது காவல் துறைக்கு அளிக்கும் மனுவை கோயிலில் வைத்து புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்தபோது ஏராளமான தவெகவினர் கூடினர். போலீசார் அறிவுறுத்தியும் கலைந்து செல்லவில்லை என்றதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி கூட்டம் கூடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஐடி விங் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், “எங்களது கழக தலைவருக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவை பார்த்து பயந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் திமுக அரசு,கடந்த வாரம் எங்கள் தலைவர் அண்ணன் விஜய்யின் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க சென்ற கழக பொது செயலாளர் அண்ணன் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது. எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், ‘த.வெ.க.வை கண்டு திமுக அஞ்சுகிறது’ என விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.