‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது சரிதான்’ என்ற தொணியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் தெரிவித்ததாவது, ‘‘கோவில் மாநகர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன. மிகவும் சிறப்பான ஊர் காஞ்சிபுரம் மாநகர். நித்யானந்தாவை அப்பொழுதே மடத்தை விட்டு நீக்கியாச்சி. இனி அவர் நுழைந்தாலும் மடத்திற்குள் விடமாட்டோம். நாட்டுக்குள்ள அவரு வந்தாலே கைது செய்யப்படுவார்.
அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்தது நல்லது தான். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும். பாமக வெற்றி பெற்றால் உண்டு. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு அதிக செல்வாக்கு உண்டு.
அரசியல் கருத்துக்களை நான் ஏன் சொல்லக்கூடாது? ஜனநாயக நாட்டில் நான் ஓட்டு போடுகிறேன். ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. இஸ்லாமிய அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. அதேபோன்று நாங்கள் ஏன் சொல்லக்கூடாது. நாங்கள் சொல்லாமல் இருந்தால் என் தமிழர்களை கொலை செய்வார்கள் அதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் தமிழன் நானும் ஓட்டு போடுகிறேன். எனக்கு ஓட்டு உரிமை உள்ளது. எனக்கும் உரிமை உள்ளது. வயிற்று எரிச்சலில் தான். இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களை வெற்றி பெற செய்துள்ளார்களே என்ற வயிற்றெரிச்சல்’’ என்றார்.