நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2019ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணிகள் அனைத்தையும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைப்பட்டது. இதனையடுத்து அதிக பணியாளர்களை கொண்டு இரவு பகல் பாராமல் பணிகள் மேற்கொண்டதை அடுத்து நிறைவு பெற்றுள்ளது. 134 ஏக்கரில் 75,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் நான்கு நுழைவுவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பயணிகள் வெளியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 700க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமான நிலைய புதிய முனையத்தை ஜனவரி மாதம் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal