சென்னையில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் மூர்த்தி (34) என்பவர், கடந்த சில நாட்களாக மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை (மெஸேஜ்)அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியர் மூர்த்தியை கண்டித்து எச்சரித்துள்ளனர். இருப்பினும், அதன் பிறகும் மூர்த்தி, மாணவிக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீஸார் உடற்கல்வி ஆசிரியர் மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal