நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் ‘அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான்..!’ என அடித்துப் பேசினார் தமிழக முதல்வர் விஜய்! அதனால்தான் என்னவோ, கலைஞரின் சுவடுகளை கலைக்கிறாரா விஜய்? என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்!
கடந்த ஆட்சியில் தி.மு.க.வால் கெண்டுவரப்பட்ட திட்டங்கள் முதல் டெண்டர்கள் வரை த.வெ.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் 1971ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட ‘மாநில திட்டக் குழு’வை கலைக்கும் முயற்சியில் விஜய் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு கடந்த 1971-ல் மாநில திட்டக் குழு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. கலைஞரால் உருவாக்கப்பட்ட அந்த திட்டக் குழுவிற்கு மாநில முதலமைச்சர்தான் தலைவர். குழுவின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நியமிக்கப் பட்டனர்.
இந்தக் குழு, மக்களின் வரிப்பணம் விரயமாகாமல் தடுத்தல், எந்தெந்த திட்டம் அவசர அவசியம், திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டதா? செலவிடப்படவில்லையா? சமுக நலன் சார்ந்த திட்டங்களை முன் மொழிதல் உள்பட பல்வேறு காரணிகளை ஆராய்ந்தும், கண்காணித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
இதுவே இந்த குழுவின் தலையாய நோக்கமாக இருக்கும். அந்த வகையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியிருக்கிறது மாநில திட்டக் குழு! இந்தக் குழுவைத்தான் கலைப்பதற்கு முதல்வர் ஜோசப் விஜய்யிடம் ஒரு கருத்துருவை தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்மை யில் அரசின் உயரதிகாரிகளிடம் ஆலோச்சித்துள்ளார் விஜய். மாநில திட்டக் குழுவை கலைக்கலாம் என்கிற ஆலோசனையை, முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்துவது யார்? என்கிற கேள்விதான் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது, தவெக அரசு அமைந்ததும் தமிழகத்தின் வளர்ச்சிக் குறித்தும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கச்செய்யவும் அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பொருளாதார வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கினால் ஆரோக்கியமாக இருக்கும் என்று விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலாளர் சாய்க்குமார் உள்ளிட்ட சில அதிகாரிகள் இதனை முதல்வரிடம் முன் மொழிந்திருந்தனர். இதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து பல்வேறு ஆலோசனைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் வருவாயை அதிகரிக்கச்செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கைத்தருவதற்காக, பொருளாதார நிபுணரும் மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் விஜய்யிடம் எடுத்துச்சொல்ல, அதற்கு ஒப்புக் கொண்டார்.
மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இது குறித்து தலைமைச் செயலாளர் சாய்க்குமார் பேசினார். அவரும் ஒப்புக்கொண்ட நிலையில், மாண்டேக் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தான், மாநில திட்டக்குழுவை கலைத்து விடலாம். அந்த குழுவால் எந்த பலனும் இல்லை என்று முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அதனடிப்படையில் தான் திட்டக்குழுவை கலைக்கும் முடிவுக்கு முதல்வர் விஜய் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
