திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதி அ.தி.மு.க.வில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள், அச்சமுதாய மக்களை அ.தி.மு.க.விற்கு எதிராக திசை திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. 2016 மற்றும் 2021 என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க.வில் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றனர். ஆனால், தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுபற்றி துறையூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வில் நீண்டநாட்களாக இருக்கும் தேவேந்திர வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். ‘‘சார், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தனி தொகுதியாக இருக்கிறது. எனவே, இங்கு தேவந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை களமிறக்கினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் வெற்றி பெறும் சூழல்கள் இருக்கிறதா என்பதை தலைமை ஆராயவேண்டும். இல்லாவிட்டால் இங்கு மீண்டும் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

காரணம், துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் முத்தரையர் வாக்குகள் அதிகளவில் இருக்கிறது. தவிர, சுமார் 55 ஆயிரம் வாக்குகள் தேவேந்திர குலவேளாளர் சமுதாய வாக்குகள் இருப்பதால், அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக நேர்காணல் நடத்தினார் அப்போது, அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் நேர்காணலுக்கு சென்றனர். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

எனவே, துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த, தகுதியான ஒரு நபரை நிறுத்தினால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும். இல்லாவிட்டால் தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பல வருடங்களாக தொகுதிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் அ.தி.மு.க.வில் விருப்பமனு கொடுத்து காத்திருக்கிறார். அவருக்குத்தான் வாய்ப்பு என முதலில் கூறப்பட்டது.

ஆனால், சில ‘குளறுபடிகளால்’ தகுதி வாய்ந்த நபருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தகுதிவாய்ந்த, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை களத்தில் இறக்கினால்தான் தி.மு.க.விற்கு எதிராக களத்தில் இறங்கி போராட முடியும். இல்லாவிட்டால் தி.மு.க.வின் வெற்றி எளிது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தும், ‘சிலர்’ முட்டுக்கடை போடுவதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கலாமா? அல்லது……? என மாற்றி யோசிக்க ஆரம்பித்து வருகிறார்கள் தேவேந்திரகுள வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்’’ என்ற அதிர்ச்சி குண்டை போட்டனர்.

ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டன்றத் தொகுதியான துறையூரில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துவிடும் என்கிறார்கள் தொகுதியின் களநிலவரத்தை நன்கு அறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal