கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியான இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கலைஞரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ட்ரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும் கனிமொழியின் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது!
