தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக மருத்துவர் கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் மீண்டும் வாய்ப்பு கோரி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர் அன்பரசனின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதனிடையே திமுகவில் வேட்பாளர் பட்டியல் குறித்த சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கூட்டணிக்கு அளித்ததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தாம்பரத்தில் திமுக சார்பில் மருத்துவர் கிருத்திகா தேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் தொகுதியில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கோரி அவருடைய ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே 3 முறை எம்எல்ஏவாகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்.ஆர்.ராஜாவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனை வலியுறுத்தி, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் அன்பரசன் ஆகியோரின் இல்லத்தை எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தின் போது, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. வேட்பாளரை மாற்றிவிட்டு, மீண்டும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இதேபோல், தலைமை நிலைய செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வீடுகளையும் எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற அவர்கள் அங்கும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனர். பின்னர் அ.ராசா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாம்பரம் தொகுதியில் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் மருத்தவர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி. இவர் தி.மு.க.வின் சீனியரான சோமுவின் மகள் கனிமொழியின் நெருங்கிய தோழியும் கூட! இந்த நிலையில்தான் ‘சமுதாய’ பற்றில் இவரை வேட்பாளராக அறிவித்ததற்குப் பின்னணியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சோமு மகள் கனிமொழி ஆகியோரும், எம்.பி.க்கள், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் டி.ஆர்.பாலுவின் வீட்டை முற்றுகையிட்டிருக்கிறார்கள் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள். தாம்பரம் தொகுதியைப் பொறுத்தளவில் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் கொடுப்பார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வாய்ப்பு கொடுக்காத அதிருப்தியில் டி.ஆர்.பாலு வீடு தொடங்கி அறிவாலயம் வரை தங்களது அதிருப்தி குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வேட்பாளரை மாற்றாவிட்டால் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலை பார்க்கமாட்டார்கள். இதனால், அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எளிதில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. தாம்பரம் தொகுதியைப் பொறுத்தளவில் இலை துளிர்த்து, சூரியன் மறையும் நிலைதான் இருக்கிறது’’ என்றனர்.
தா.மோ.அன்பரன் தரப்பினரோ, ‘‘சார், இரு சக்கர வாகனத்தில் துணி வியாபாரம் செய்தவர்தான் எஸ்.ஆர்.ராஜா. அதன் பிறகு செங்கல், சிமென்ட் வியாபாரம் என தொழிலை விரிவுபடுத்தியவர், வேளச்சேரியில் ஸ்டாலின் விடுகட்டியபோது தொழில் ரீதியாக ஏற்பட்ட நட்பின் வாயிலாக தாம்பரம் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். இன்றைக்கு எஸ்.ஆர்.ராஜா இந்தளவிற்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உச்சத்தை அடைந்திருக்கிறார் என்றால், அதற்கு காரணம் தி.மு.க. என்ற இயக்கம்தான். அந்த இயக்கத்திற்கு எதிராக வேலை பார்க்கமாட்டார் என நம்புகிறோம்.
தி.மு.க.வைப் பொறுத்தளவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். அந்த வகையில்தான் மருத்துவர் கிருத்திகா தேவியை வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். எனவே, எஸ்.ஆர்.ராஜாவிற்கு வேறு வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் கொடுப்பார்’’ என்றனர்.
ஆக மொத்தத்தில் தாம்பரம் தொகுதியில் நடக்கும் திரைமறைவு அரசியல் காரணமாக இலை துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
