தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்றே கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘‘ஊழல் மிகுந்த, திறமையற்ற, தமிழ் விரோதப் போக்கைக் கொண்ட மு.க. ஸ்டாலின் – & உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கத்தை நாம் முன்னெடுக்கும் வேளையில் தமிழ்நாட்டில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக திமுக, தமிழகத்தை மிகக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. எனவே தீய சக்தியான திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்கவுள்ளோம். திமுக – காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியால் தமிழ்நாட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், டெல்லி என நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதைப் போலவே தமிழ்நாட்டிலும் தோல்வியைச் சந்திப்பார்கள்.

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசாங்கத் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், தொலைநோக்குத் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு வலிமையான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஏற்க தற்போது தமிழ்நாடு தயாராக உள்ளது. வருங்கால முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள ஒரு அரசாங்கத்தையே தமிழக மக்கள் விரும்புகின்றனர். அந்த அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்துறையினருக்கு வளர்ச்சியைப் பெற்றுத்தரும். நமது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும். புத்தாக்க நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும். தரமான மருத்துவம் மற்றும் கல்வியை உறுதி செய்யும். ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை அமைத்துத் தரும். வாழ்வில் அனைவரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்து, ஒரு வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க அயராது பாடுபடும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட ​எந்தவொரு பணியையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதை நான் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அப்பணியின் தரத்தையே நான் முதன்மையாகக் கருதினேன். இருப்பினும், எங்களுக்கிடையே நிலவும் குடும்ப உறவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், நயினார் நாகேந்திரன், எல். முருகன், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரே குடும்பமாகச் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து கலந்தாலோசித்து, தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை இன்றே உங்களுக்குத் தெரிவிப்போம்.

அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து, பிரதமரின் தமிழக தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்து முடிவெடுப்போம். இத்தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை வழங்கும்’’ என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal