தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வந்த காங்கிரசை ஒரு வழியாக கூட்டணியில் இணைத்த தி.மு.க.வுக்கு திருமா, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தற்போது ‘தலைவலி’யை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சிபிஎம் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத சூழலில், சிபிஎம் கட்சி தரப்பில் மார்ச் 23ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடக்கவிருப்பதால், அதற்குள் ஒரு முடிவு எடுக்குமாறு நேரடியாகவே திமுகவிடம் கூறி இருக்கின்றனர்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுக, கொமதேக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கடந்த முறையை விட கூடுதலாக 3 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அத்தனை கட்சிகளுக்கும் 1 முதல் 2 இடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால், அனைவரும் தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்து வருகிறது.

இதனால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து அத்தனை கட்சிகளும் பின் வாங்கிவிட்டன. ஆனால் எந்த நிலையிலும் தொகுதிகளை குறைத்து கொள்ள முடியாது என்பதில் சிபிஎம் கட்சி கறாராக இருக்கிறது. சிபிஐ போல் 5 கட்சிகள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சிபிஎம் நிர்வாகிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இறங்கி வரும் மனநிலையில் இல்லை. இப்போது வந்த தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளா என்று கொந்தளித்து வருகிறார்.

ஏற்கனவே திமுக – சிபிஎம் இடையில் 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட சூழலில், பெ.சண்முகம் அதிருப்தியில் இருக்கிறார். ஏனென்றால் 5 தொகுதிகள் என்பதில் இருந்து திமுக இறங்கி வர மறுக்கிறது. ஆனால் சிபிஎம் தரப்பில் 6 தொகுதிகளுக்கு 1 குறைந்தால் கூட எங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என்று சிபிஎம் கட்சி தரப்பில் கூறிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் சிபிஎம் கட்சி தரப்பில் திமுகவுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மார்ச் 23ஆம் தேதி சிபிஎம் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டை முடிக்க அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை திமுக கறாராக இருந்தால், நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம் என்றும் கூறி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal