தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். அதிமுக பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணி ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசித்து இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமனம் செய்தது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டிசம்பர் 24 ஆம் தேதி சென்னைக்கு வந்து பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் பியூஷ் கோயல். அதனைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது, அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை வரும் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கவே மத்திய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 179 இடங்களில் போட்டியிட்டது. மேலும், கூட்டணி கட்சிகள் 12 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன. பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் இந்த முறை, 20 தொகுதிகளை விட அதிக இடங்களில் களம் இறங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அமமுகவும் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற முயன்று வருகிறது.
