அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் வழக்கம்போல, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளது. அதேசமயம், விஜயால் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முதன்முறையாக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் சூழல் உள்ளது.

அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைவிற்குப் பிறகு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த மூத்த அரசியல் பிரமுகங்கள் மாற்றுக் கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் தான் நேற்று, அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த தனபால் கடந்த, 2016 ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சபாநாயகராகப் பதவி வகித்திருந்தார். தொடர்ந்து, தற்போது அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இவர், கடந்த மக்களைவைத் தேர்தலின் போது, நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். இந்த சூழலில் தான், நேற்று அதிமுகவில் இருந்து திடீரென விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.

தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய லோகேஷ் தமிழ்ச்செல்வன், “எனது தந்தை போன்ற மூத்தவர்களுக்கு அதிமுகவில் மரியாதை கிடையாது. நேரம் கிடைக்கும்போது இதே போல முடிவுகளை அதிமுகவில் இருக்கும் மூத்தவர்கள் எடுப்பார்கள். சிறு வயதில் இருந்தே விஜய் ரசிகன் நான். தனது தந்தை தனபால் நிர்பந்தத்தினால் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதில் தாமதமாக இருந்தது. தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கட்சி தலைமை நிர்வாகிகள் யாரும் தந்தையை சந்திக்கவில்லை, அப்போதே எங்களுக்கு மன வருத்தம் இருந்தது” என தெரிவித்தார்.

மேலும், இமானுவேல் சேகரன் பேரன் சக்கரவர்த்தி, எம்ஜிஆர் ஜெயலலிதா உடன் நீண்ட நாட்கள் பணியாற்றிய அதிமுகவைச் சேர்ந்த பாபுஜி கௌதம், ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சினோரா பி எஸ் அசோக் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

முன்னாள் சபாநாயகர் மகன் த.வெ.க.வில் இணைந்தது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தனபால் மகன் கடந்த முறை நீலகிரி நாடாமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனபாலுக்கும், அவரது மகன் என இருவருக்குமே வாய்ப்பி இல்லை என்கிறார்கள்.

அதாவது சபாநாயகர் தனபால் போட்டியிட்ட அவினாசி தொகுதி, இந்த முறை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும், அந்தத் தொகுதியில் வி.பி.துரைசாமி போட்டியிட இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதனால்தான், தனபால் மகன் த.வெ.க.வில் இணைந்திருக்கிறார்’’ என்றனர்.

சீட் கிடைக்கலேன்னா கட்சி மாறிவிடுவார்களோ…? அப்படின்னா தி.மு.க.வில் இருந்தும் இன்னும் பலர் மாற காத்திருக்கிறார்களாம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal