அ.தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்பில்லை என்ற பிறகு தி.மு.க.வில் இணைய ஓ.பி.எஸ். முடிவு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சசிகலா பக்கம் போகலாமா என்ற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஓ.பி.எஸ்.ஸின் நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவில் பெரிய பிளவுக்கு வழிவகுத்தன. அந்த காலத்தில் முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்து, பின்னர் தனித்து விடப்பட்டு, தனது அரசியல் போராட்டத்தை தொடங்கினார். பின்னர் ஏற்பட்ட சமரசத்தின் மூலம் அவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து கட்சியை வழிநடத்தினர். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் கட்சிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். கட்சிக்குள் மீண்டும் இடம் பெற முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டாலும் அவை பலனளிக்கவில்லை. இந்த சூழலில் அவர் செல்வாக்கை நிலைநிறுத்த திய வழிகளை ஆராய்ந்ததாக தகவல்கள் வெளியானது. பின்னர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பாஜகவின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்புகள் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் அந்த முயற்சிகளும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் விலகி பிற அரசியல் அணிகளில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றது, அவரது அரசியல் நிலைப்பாட்டில் சவாலை உருவாக்கியது. அவருடன் இருந்த முக்கிய ஆதரவாளர்களின் மன மாற்றமும் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது கவனத்தை ஈர்த்தது. ஒரே நாளில் இருமுறை சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், தனது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகள் வழங்குமாறு அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு பதிலாக, திமுக சார்பில் போட்டியிட விரும்பினால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஓ.பி.எஸ். மாற்றி யோசிப்பதாகவும் தெரிகிறது. காரணம், இத்தனை ஆண்டுகள் இரட்டை இலை சின்னத்தில் நின்றுவிட்டு, உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அவப்பெயர் ஏற்படும் என நினைக்கிறார் ஓ.பி.எஸ.

மேலும், அவர் இந்தத் தேர்தலில் தானே நேரடியாக போட்டியிடத் திட்டமிடவில்லை என்றும், தனது ஆதரவாளர்களுக்கான அரசியல் வாய்ப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பையும் அவர் பரிசீலித்து வருகிறாராம். அதேசமயம், அவரது மகனுக்கு மாநிலங்களவை இடம் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், வி.கே. சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. வரும் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அணிகள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறார் சசிகலா. அதிமுகவின் அடுத்த ஜெயலலிதாவாக பார்க்கப்பட்ட சசிகலா ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னே வெளியேறியவர். அதற்கு காரணம் ஓ பன்னீர்செல்வம் தான். இந்த நிலையில் நடந்தது நடக்கட்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என சசிகலா திட்டமிட்டு தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் ‘அம்மா அதிமுக’ என்ற புதிய கட்சியும் உதயமாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னை எதிர்த்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், ஒஎஸ் மணியன், காமராஜ் ஆகியோரின் தோற்கடிக்க அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காக ஓ பன்னீர்செல்வத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள அவர், விஜயின் உதவியையும் நாட இருக்கிறார்’’ என்றனர்.

அரசியல் களத்தைப் பொறுத்தவரை தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல், நொடிக்கு நொடி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருந்தால் அரசியல் அவர்களை கைவிட்டு விடும். ஒ.பி.எஸ்.ஸுக்கு இன்றைக்கு அந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal